நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (23) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும், அத்துடன் குருணாகல், அனுராதபுரம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும். மேலும், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மத்திய, சபரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
