புத்தாண்டு காலப்பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். குறித்த விடயத்தை போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவிற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான காணொளி ஆதாரங்களை, பொதுமக்கள் சமர்ப்பிப்பதற்காக 070 4755600 என்ற விசேட வட்ஸ்அப் (whatsapp) இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தான் அவதானிக்கும் போக்குவரத்து விதிமீறல்களை காணொளியாக பதிவு செய்து இந்த இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும். புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு இன்று முதல் இந்த விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும், பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதற்குமான ஒத்துழைப்பை வழங்குமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. மேலும், சாரதிகள் மதுபோதையில் வாகனம் செலுத்தல், அதிக வேகம் மற்றும் அபாயகரமான முறையில் முந்திச் செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்”என பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.