நாட்டு மக்களுக்கு உடனடி நிவாரணம் : சஜித் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

 நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அவற்றுக்கு உரிய தீர்வுகளை அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் மக்களுக்கு ஒரு விசேட நிவாரணப் பொதியை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளிக்கிழமை (03) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலகில் உள்ள பல நாடுகள் எரிபொருளுக்கான வரிகளைக் குறைத்து நுகர்வோருக்குப் பலன்களை வழங்கியுள்ளன என்றும், உழைக்கும் மக்களின் வாழ்க்கைச் சுமையையும் அழுத்தங்களையும் குறைப்பதற்காக அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நமது நாட்டின் நிலைமை இதற்கு நேர்மாறாக உள்ளது. இங்கு எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம் மற்றும் வரிச்சுமை போன்ற அனைத்தும் அதிகரிக்கப்பட்டு மக்கள் மீது அதிகபட்ச சுமை சுமத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அரசாங்கம் திறைசேரியில் ட்ரில்லியன் கணக்கில் பணம் நிறைந்து வழிவதாகத் தம்பட்டம் அடித்துக் கூறுகிறது. அப்படியானால், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அந்தப் பணத்தைப் பயன்படுத்தி, சொல்லொணாத் துயரங்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகி வாழ வழியின்றித் தவிக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு ஏன் நிவாரணம் வழங்க முடியாது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கத்தைச் சுற்றி இருக்கும் ஒரு சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அதிகபட்ச சலுகைகள், ஒப்பந்தங்கள் மற்றும் வரி விலக்குகள் போன்ற அனைத்தும் கிடைக்கின்றன என்றும், அவர்கள் கோடீஸ்வரர்களாகவும் ட்ரில்லியன் அதிபர்களாகவும் மாறி வருகிறார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் இந்த நாட்டின் சாதாரண மக்களுக்கும், அமைதியாக இருக்கும் பெரும்பான்மையான பொதுமக்களுக்கும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. எனவே மக்களுக்கு உடனடியாக ஒரு நிவாரணப் பொதியை வழங்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மக்கள் தங்கள் வாழ்க்கையை வலுப்படுத்திக் கொள்வதற்கும், பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும், இதற்காக வரிச்சுமை, எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம் போன்றவற்றைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post