நிலக்கரி இறக்குமதியில் இலங்கை மின்சார சபைக்கு சமீபத்தில் ஏற்பட்ட நஷ்டங்களே நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வுக்கு முக்கியக் காரணிகளில் ஒன்று என இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவின் தலைவர் இவான் பாபஜார்ஜியோ தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை மின்சார சபையின் நிதி நிலைத்தன்மையையும் அதன் இருப்பையும் உறுதி செய்வதற்கு கட்டணங்களைத் திருத்தி அமைப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.நிலக்கரி ஏற்றுமதியில் ஏற்பட்ட நஷ்டங்கள் இலங்கை மின்சார சபையின் இலாபங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கட்டண உயர்வைப் பரிந்துரைப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று என்றும் கூறிய அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற நஷ்டங்களைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
