கடந்த இரண்டு மாதங்களில் வாகன இறக்குமதி செலவுகள் வேகமாக அதிகரித்தமையினால் வாகன இறக்குமதி மீது 50% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் வரி குறித்து இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.தொடர்ந்தும் பேசிய அமைச்சர்.
கடந்த இரண்டு மாதங்களில் இறக்குமதி செலவுகள் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப நாட்டில் உள்ள கையிருப்பை நிர்வகிப்பதற்காக இந்த நடவடிக்கை 3 மாதங்களுக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இருப்பினும், வாகன இறக்குமதிக்கு எந்த தடையோ அல்லது கட்டுப்பாடோ இல்லை என்றும், இந்த நடவடிக்கை மூன்று மாத காலத்திற்கு மாத்திரம் எடுக்கப்பட்டுள்ளதென்றும், ஆனால் இந்த நேரத்தில் யாராவது ஒரு வாகனத்தை இறக்குமதி செய்ய விரும்பினால், அவர்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கை 3 மாத காலத்திற்கு மட்டுமே நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதால், வாகனங்களின் இறக்குமதியை 3 மாதங்கள் வரை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம். இந்த முடிவின் மூலம், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, 3 மாத காலத்திற்கு நாங்கள் வரியை அதிகரிக்கிறோம்.
3 மாத காலத்திற்குள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை உங்களால் முடிந்தால் தாமதப்படுத்துங்கள் என்ற செய்தியை வழங்குவதே இதன் நோக்கம்.விலையை அதிகரிப்பது இதன் நோக்கமல்ல.
வாகன இறக்குமதியின் போது விதிக்கப்படும் சுங்கத் தீர்வை வரி 30% ஆகும். அந்த 30% இல் 50% என்பது, 15% மட்டுமே அதிகரிக்கிறது. வாகனங்களின் விலை 50% ஆல் அதிகரிக்கும் என்று கூறுவது முற்றிலும் கட்டுக்கதையாகும். அதிகரித்தாலும் 15% மட்டுமே அதிகரிக்கும்.
அந்த அதிகரிப்பு, தங்களது நுகர்வை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க முடியாதவர்களுக்கு மட்டுமே செலுத்த வேண்டியதாக இருக்கும். இது ஒட்டுமொத்தமாக சந்தை விலையை பாதிக்காது" என தெரிவித்துள்ளார்.
