யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தனது நிதி உதவித் திட்டத்தை இந்தியா விரிவுபடுத்தியுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட இளங்கலை மாணவர்களுக்கான மேம்படுத்தப்பட்ட நிதியுதவிகளை இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் நேற்று 2026 ஜூன் 2 ஆம் திகதியன்று வழங்கி வைத்துள்ளது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியைக் கொண்ட திறமையான மாணவர்களுக்கு ஆதரவளிப்பதையும், அவர்கள் தங்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் எதிர்கால வாய்ப்புகளில் கவனம் செலுத்துவதை உறுதி செய்வதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
2023–24 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னைய திட்டத்தின் கீழ், கல்வித் திறன் மற்றும் நிதித் தேவையின் அடிப்படையில் 100 மாணவர்களுக்கு மாதத்திற்கு 5,000 ரூபா வழங்கப்பட்டது.
இந்தநிலையில் 2025–26 கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், 100 முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம் அவர்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் வரை தொடர்ந்து வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டு, நான்காம் ஆண்டில் மொத்தம் 400 மாணவர்கள் வரை இந்த நிதியுதவியைப் பெறுவர்.
2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த விரிவாக்கம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான மேம்படுத்தப்பட்ட ஆதரவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்படுத்தியிருந்தார்.
