இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி போலி வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை தயாரித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முதலாவது மாடியில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 7 கடவுச்சீட்டுகள், இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பல்வேறு நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அழைத்து வந்து, போலி ஒப்பந்தங்களை தயாரித்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
