தேசிய வீடமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒருங்கிணைந்த வழிகாட்டல் வழங்கும் நோக்கில் தேசிய வீடமைப்பு நடவடிக்கைக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைச் சனத்தொகையில் குறிப்பிடத்தக்க அளவினர் வீடற்ற நிலையில் இருக்கின்றமை 2024 ஆம் ஆண்டின் குடிசன மற்றும் தொகைமதிப்பின் மூலம் பதிவாகியுள்ளது.
அவர்களில் குறைந்த வருமானங்கொண்டவர்கள், பெருந்தோட்ட சமூகத்தவர்கள், இயலாமைக்குட்பட்ட நபர்கள், மீனவர்கள், வீடற்ற நகர்ப்புற வாழ் மக்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் இடம்பெயர்ந்துள்ளவர்கள் போன்ற மிக முக்கிய வகுதியினருக்கு வீடுகளின்மை இலங்கை முகங்கொடுத்து வருகின்ற பிரதான சவாலாக உள்ளது.
அதனால், பங்கேற்புத் திட்டமிடல், பொருளாதார உற்பத்தித்திறன், சுற்றாடல் பாதுகாப்பு, சமூக ரீதியான உள்வாங்கல் மற்றும் கலாச்சாரப் பொருத்தப்பாடு போன்ற கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தற்போதுள்ள தேசிய வீடமைப்புக் கொள்கையை மீளாய்வு செய்தல் மற்றும் காலத்தோடு தழுவியதாக மேம்படுத்த வேண்டியுள்ளது.
தற்போது அமைச்சுக்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் மாகாண சபைகள், உள்ளுராட்சி நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் தனியார் துறை மற்றும் சமூகமட்ட அமைப்புக்கள் மூலம் பல்வேறு பொறிமுறைகள் மற்றும் தரநியமங்களுக்கமைய வீடமைப்பு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், வீடமைப்புத் துறையின் பொறுப்புக்களும் பரந்துபட்டுக் காணப்படுகின்றன. 2026 ஆம் ஆண்டில் வீடமைப்புக்களுக்கு 100 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை உயர்ந்தளவில் அடைவதற்காக, தற்போதுநடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதும், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள வீடமைப்பு வேலைத்திட்டங்களை, தேசிய ரீதியாக ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் அமுல்படுத்துவதற்கு இயலுமை கிட்டும் வகையில் தேசிய நடவடிக்கைக் குழுவொன்றை நியமிக்க வேண்டிய தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது.
அற்கமைய, தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கான வழிகாட்டலை வழங்கல், தொழிநுட்ப ஆலோசனைகளை வழங்குதல், கண்காணிப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தலையிடுகள் மற்றும் தொடராய்வு செய்வதற்காக தேசிய வீடமைப்பு நடவடிக்கைக் குழுவொன்றை நியமிப்பதற்கு வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
