பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான டொங்காவில் (Tonga) இன்று (மார்ச் 24) ரிக்டர் அளவில் 7.6 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்டுள்ள தகவலின்படி,
இந்த நிலநடுக்கம் பூமியின் உட்பகுதியில் சுமார் 238 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதன் மையப்புள்ளி நெயியாஃபு (Neiafu) நகரில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் தலைநகர் நுக்குஅலோபா உள்ளிட்ட பகுதிகளில் கட்டிடங்கள் பலமாக அதிர்வடைந்தன.
நிலநடுக்கம் ஏற்பட்ட உடனே டொங்காவின் தேசிய பேரிடர் இடர் மேலாண்மை அலுவலகம் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது
கடலோரப் பகுதி மக்கள் உடனடியாக நிலப்பகுதியை நோக்கியோ அல்லது உயரமான இடங்களுக்கோ செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
அபாய எச்சரிக்கை ஒலிகள் கேட்டவுடன் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கட்டிடங்களின் கூரைகள் மீது ஏறித் தஞ்சம் அடைந்துள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் பின்னர் வெளியிட்ட அறிவிப்பில், நிலநடுக்கம் ஆழமான பகுதியில் நிகழ்ந்துள்ளதால் கடலலைகளில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், சுனாமி அச்சுறுத்தல் ஏதுமில்லை என்றும் உறுதிப்படுத்தியது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சொத்துச் சேதங்கள் அல்லது உயிர்ச்சேதங்கள் குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இருப்பினும், கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஹங்கா-டொங்கா எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட பேரழிவை நினைவு கூர்ந்த மக்கள், இன்றும் அதே போன்றதொரு பதற்றமான சூழலை எதிர்கொண்டனர்.
