இலங்கையின் வடக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, சோதனைச் சாவடியில் நிற்கத் தவறியதாகக் கூறப்படும் வேன் மீது அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, 17 வயது இளைஞன் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் இந்த சம்பவம் பிப்ரவரி 10 ஆம் திகதி அதிகாலையில் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் உள்ள அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திற்கிடமான வேனை நிறுத்துமாறு அதிகாரிகள் சமிக்ஞை செய்ததாகவும், ஆனால் வாகனம் உத்தரவை புறக்கணித்து மண்டைதீவு நோக்கி வேகமாகச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தப்பிச் சென்ற வேன் பற்றிய தகவல் ஊர்காவல்துறை பொறுப்பதிகாரி பயணித்த ஜீப்பிற்கு தெரிவிக்கப்பட்டது, அவர் வாகனத்தை இடைமறிக்க முயன்றார். வேனை நிறுத்த பலமுறை முயன்றும் வேன் தொடர்ந்து தப்பிச் சென்றதால், அதிகாரிகள் முதலில் வேனை நோக்கி சுட்டனர் . வாகனத்தை நிற்கத் தவறியதால், சாரதி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் சாரதி காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வேனின் பின்புற இலக்கத் தகடு அகற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த நேரத்தில் வாகனத்திற்குள் இருந்த மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
