தேவைப்பட்டால் ஈரான் (Iran) மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் இஸ்ரேலுக்கு (Israel) ஆதரவாக ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இதன் பின்னர் 12 நாள்கள் போருக்குப் பிறகு இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் பேச்சுவார்த்தையின் மூலமாக முடிவுக்கு வருவதாக ட்ரம்ப் அறிவித்தார்.
இருப்பினும், அமெரிக்கா மற்றும் ஈரான் தலைவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாகப் பேசி வருகின்றனர்.
அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் அழிந்துவிடும் என்பதால் அமெரிக்கா தலையிட்டதாகவும் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ட்ரம்ப் செய்தியாளர்களுடன் பேசுகையில், ஈரான் தலைவர் கமேனியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அத்தோடு, தெஹ்ரான் வரம்புக்கு அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டுவதாக உளவுத் துறை தகவல் கொடுத்தால், ஈரான் மீது கண்டிப்பாக மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு கேள்விக்கே இடமில்லை எனவும் மற்றொரு இராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிட சற்றும் தயங்க மாட்டேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.