விரும்பியோ-விரும்பாமலோ-16 வயதுக்கு கீழ்பட்ட பிள்ளைகளோடு உடலுறவு-தொடர்பில் சற்று முன் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அதிரடி அறிவிப்பு..!

 

நாட்டில் தற்போதுள்ள சட்டத்துக்கு அமைய 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளை விரும்பியோ விரும்பாமலோ பாலியல் உடலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் துஷ்பிரயோகமாகவே கருதப்படும். இதற்காக 10 வருட கால சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருமான ரங்க திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் பிரஜை ஒருவர் சுதந்திரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்வதற்கு போதுமான அனைத்து சட்டங்களும் உள்ளன. நான் கடந்த 20 வருடங்களாக நீதிபதியாக கடமையாற்றினேன். இந்த புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னரே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டேன்.

எனது தொழில் துறை அனுபவத்தை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது நாட்டில் உள்ள சட்டங்கள் தொடர்பில் பொதுமக்களிடத்தில் போதுமான அறிவில்லை. உதாரணமாக நாட்டில் தற்போதுள்ள சட்டத்துக்கு அமைய 16 வயதுக்கு கீழ் உள்ள பெண் பிள்ளை விரும்பியோ விரும்பாமலோ பாலியல் உடலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் துஷ்பிரயோகமே கருதப்படும்.

உதாரணமாக 17 அல்லது 18 வயதுடைய ஆண் பிள்ளை 15 வயதுடைய பெண் பிள்ளையுடன் நெருங்கி பழக்கம் கொள்வதாக நினைத்து கொள்வோம். இந்த காலப்பகுதியில் இயற்கையாகவே அவர்களது உடல் ரீதியாக மாற்றங்கள் ஏற்படும். இதனால் அவர்கள் சில சந்தர்ப்பத்தில் பாலியல் உடலுறவில் ஈடுபடலாம்.

ஒருவேளை இது இருவரின் விரும்பத்தின் பேரிலேயே இடம்பெற்று இருக்கலாம். விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் உடல் உறவில் ஈடுபட்டாலும் அது பாலியல் துஷ்பிரயோகமாகும் என எமது நாட்டில் உள்ள சட்டம் சொல்கிறது. இதற்காக 10 வருட கால சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

எமது பிள்ளைகள் அதிகம் இந்திய சினிமாவின் ஹிந்தி திரைப்படங்களையே பார்க்கிறார்கள். இவர்கள் காதலிக்கும் பெண் பிள்ளையை கூட்டிக்கொண்டு ஓடுவதை வீரமாக கருதுகிறார்கள்.பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் போது அவர்களிடத்தில் இந்த சட்டம் தொடர்பில் வினவுவேன்.

ஆனால் அவர்கள் தெரியாது எனக் கூறுவார்கள். அப்போதே அது தவறு என விளங்கிக் கொள்வார்கள். சட்டம் தொடர்பில் தெளிவின்மையே இதற்கான காரணம்.விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாக நடப்பதை மாத்திரமே இங்கு தவறு என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே இந்த விடயம் பிள்ளைகளுக்கு பாடசாலை மட்டத்தில் இருந்து தெளிவுப்படுத்தப்பட வேண்டும். தண்டனை வழங்குவதற்காக மாத்திரம் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது அல்ல.16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகள் வயது வந்த ஆண்களினால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவதை தடுப்பதற்காகவே இந்த சட்டம் உருவாக்கப்பட்டது என்றார்.