உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், பிறந்தநாளன்று தந்தை வாங்கிக் கொடுத்த புது புல்லட்டை ஓட்டிச் சென்ற பள்ளி மாணவன், பேருந்து மோதிய விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்தோஷ் குமாரின் ஒரே மகன் வைபவ் ஷா (17). பிளஸ்-1 படித்து வந்த வைபவ், நன்றாக படிப்பதாக உறுதி கூறிய நிலையில், மகனுக்குப் பிறந்தநாள் பரிசாக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு புல்லட் பைக் ஒன்றை வாங்கி தந்தார் சந்தோஷ் குமார். புதிய பைக்கை ஓட்டி வருவதில் ஆர்வம் கொண்டிருந்த வைபவ், நேற்று காலை 7 மணியளவில் தனது பிறந்தநாளையொட்டி நண்பர் ஒருவருடன் ஆயிஷானா பகுதிக்குச் சென்றார். அப்போது நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது எதிரே வந்த ஆம்னி பேருந்து திடீரென மோதியதாக கூறப்படுகிறது. மோதிய வேகத்தில் புல்லட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் வைபவ் ஏற்கனவே பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவருடன் சென்றிருந்த சிறுவன் தீவிர சிகிச்சையில் உள்ளார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்ப முயன்ற பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே மகனை இழந்த பெற்றோர் துயரத்தில் கதறினர்.
