நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இன்று (22) அதிகாலை கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் – பலாலி வீதியின் உரும்பிராய் சந்தியில் பலாலி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 23 மற்றும் 64 வயதுடைய ஏழாலைப் பகுதியைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். லொறி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனியா – யாழ்ப்பாணம் வீதியின் பரந்தன் பகுதியில் கார் ஒன்று பாதசாரியுடன் மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டது. இதில் தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பாதசாரி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, நேற்று (21) பகல் நிகவெரட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலவக – பலல்ல வீதியின் சியம்பலேவ பகுதியில், பலல்ல நோக்கிச் சென்ற கை டிராக்டர் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 42 வயதுடைய நாகொல்லாகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை, நேற்று இரவு பாணந்துறை, பின்வத்தை பகுதியில் கார் ஒன்றும் முச்சக்கரவண்டியும் மோதி இடம்பெற்ற விபத்தில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த முச்சக்கரவண்டியில் எரிபொருள் தீர்ந்த நிலையில், படுகாயமடைந்த இளைஞரும் மற்றொருவரும் அதனை வீதியின் குறுக்கே இருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தள்ளிக்கொண்டு சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியுள்ளது. முச்சக்கரவண்டியை தள்ளிக்கொண்டு சென்ற இளைஞரின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.