சிவனொளிபாத மலைக்கு இனி கேபிள் காரில் செல்லலாம்? அரசாங்கத்தின் புதிய திட்டம்

Nila

சிவனொளிபாத மலை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல இடங்களில் கேபிள் கார் செயற்திட்டங்களை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இன்று (28) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சுற்றுலாச் செயலணியின் கூட்டத்தின் போது இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவனொளிபாத மலையை மையப்படுத்தி கேபிள் கார் செயற்திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு நீண்டகாலமாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக கிகிளியாமான, எல்ல உள்ளிட்ட பல இடங்கள் இத்தகைய செயற்திட்டங்களை ஆரம்பிக்கக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த இடங்களில் செயற்திட்டங்களை ஆரம்பிப்பது குறித்த சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், தேவையான முதற்கட்ட அனுமதிகளைப் பெறுவதற்கும், சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கைகள் குறித்து ஆராய்வதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதி முதல் 40 நாடுகளுக்கு இலவச விசா வசதியை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த வசதி மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், யால உள்ளிட்ட 19 தேசிய பூங்காக்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட இலக்குகளின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது. இதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அந்த இடங்களின் பராமரிப்புப் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அங்கு புதிய கழிப்பறைத் தொகுதிகளை அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் இது மிக முக்கியமான விடயம் என வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், கொள்ளுப்பிட்டியிலிருந்து கடற்கரை வீதியை அண்டியதாக சுற்றுலா வலயமொன்றை நிறுவுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. திட்டமிடப்பட்டுள்ள இந்தச் செயற்திட்டத்தின் மூலம் சுமார் 2,000 முதல் 3,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.