கண்டியில் வைத்தியசாலையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்தமைக்கு, வைத்தியசாலை நிர்வாகமே காரணம் என அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மடுல்கலை பகுதியிலுள்ள வைத்தியசாலையில் திடீர் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்ததை அடுத்து அங்கு சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
மடுல்கலை - கிறீன்லேண்ட் பகுதியைச் சேர்ந்த 33 வயதான இளைஞன் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீர் சுகவீனம் காரணமாக நேற்று பிற்பகல் 2 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 2.30 அளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகத்தின் அசமந்த போக்கு காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக வைத்தியசாலை வளாகத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலத்தில் உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.