சிறை வாழ்க்கைக்கு எம் குடும்பம் அஞ்சவில்லை..!

 

என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசு முயற்சிக்கின்றது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றஞ்சாட்டினார்.

கெஹெலிய ரம்புக்வெல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணையம் நேற்று வியாழக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பண மோசடி தடுப்புச் சட்டத்தில் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மருமகன் மீது இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் 43 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பில் கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த அரசு என் மீதும், என் குடும்பம் மீது ஆதாரம் இல்லாத போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது.

என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைத்து வாழ்நாள் முழுவதும் துன்புறுத்த இந்த அரசு முயற்சிக்கின்றது.

சிறை வாழ்க்கைக்கு நாம் அஞ்சவில்லை. உண்மை ஒரு நாள் வெளிவரும். நீதி தேவதை எம்மைக் காப்பாற்றுவாள்.” – என்றார்.