தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முந்தைய குழு அறிக்கைகள் மற்றும் பிற திட்டங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு வரைவு குறித்த கருத்துரு ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு குறித்து ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாகவும், புதிய அரசியலமைப்பை கொண்டு வராமல் அதைச் செய்ய முடியாது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
