இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நேற்று (16) இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், மின்னல் தாக்கியதில் 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோராபுட், கட்டாக், கோர்த்தா, நயாகட், ஜாஜ்பூர், பாலேசோர் மற்றும் கஞ்சம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை மற்றும் மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.