மாலபே - சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்ட 22 இளைஞர்களை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வீதியில் பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இளைஞர் குழுவொன்று மோட்டார் சைக்கிள் சாகசங்களை நடத்துவதாக கடுவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.குறித்த இளைஞர்கள் வாட்ஸ்அப் குழுவொன்றின் ஊடாக ஒன்றிணைந்து இந்த சாகச நிகழ்வைத் திட்டமிட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில், இலங்கையில் பதிவு செய்யப்படாத இரண்டு மோட்டார் சைக்கிள்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட 22 இளைஞர்களும் கடுவெல பகுதிக்கு வெளியே வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 05ஆம் திகதி அவர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
